நீங்க கிறிஸ்தவன்னு கூப்பிட்டா கிறிஸ்தவன்.. எனக்கென சாதியோ மதமோ கிடையாது.. உதயநிதி ஸ்டாலின் சுளீர்!
சென்னை: நான் ஒரு கிறிஸ்தவன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசியது விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், "எனக்கென்று எந்தவித சாதியோ, மதமோ கிடையாது" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசியுள்ளார்.
உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏராளமானோரின் வீடுகள் நட்சத்திரங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசியல் கட்சிகள் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, "கடந்த முறை நான் ஒரு கிறிஸ்தவன் என பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. நான் படித்தது எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில். கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
அதோடு இந்த முறை நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. என்னை நீங்கள் கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன். முஸ்லீம் என அழைத்தால் முஸ்லீம். இந்து என அழைத்தால் இந்து. எனக்கென்று சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.
எங்கள் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நான் எங்கும், எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பேசுவேன். நான் சொல்வதில் நீங்களும் உடன்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எம்மதமும் எங்களுக்கு சம்மதம்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications