ஒருநாள் கரண்ட் இல்லைனாலும் மக்கள் கேள்வி கேப்பாங்க..கண்டிப்பாக ‘இதை’ செய்யனும்! உதயநிதி போட்ட ஆர்டர்
சென்னை: மழைக் காலங்களில் அரசு அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள் எனவும், நிதி இல்லாததால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற நிலையினை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நம்முடைய அரசு அலுவலர்கள் உரிய விளக்கத்தினையும், திட்டங்களின் தற்போதைய நிலையினையும் தெரிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.
சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும்.
மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும். மழைநீர் வடிகால்கள். வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்திட வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள மனித நுழைவு பகுதி மற்றும் இரண்டு மனித நுழைவு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
இதில் எந்த தவறுகளும் நிகழாவண்ணம் பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள். அதனால் மழைக்காலத்தில் மின் வாரியப் பணி என்பது மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும்.
கழிவுநீர் கால்வாய்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மழைக்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசுவது மிகவும் சிறப்பாக அமையும். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்கள் பணிகளில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். பேரிடர் காலங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் தான் பதிலளிப்பவர்கள்.
எனவே, அலுவலர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, விரைந்து பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள் ஆய்வுப்பணிகளுக்கு செல்லும் போது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
நிதி இல்லாததால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற நிலையினை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும். அதனால் தான் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களுடைய திட்டப்பணிகளுக்கான நிதியை கழிவுநீர் குழாய் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற மக்களுடைய அடிப்படை அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியையும் இந்தப் பணிகளுக்கு பயன்படுத்திட வேண்டும்.
சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடங்களில் பெருமழையின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இந்த ஆய்வுக்கூட்டத்தினைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மழைக்காலப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். கடந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.
இன்று நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமெரிக்காவில் இருந்தபோதும், என்னையும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் தொலைபேசியில் அழைத்து தகவல்களை தெரிந்து கொண்டார். சென்னையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்கள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications