முதல்வரின் திட்டத்திற்கு நானும் பயனாளி.. “எங்க போனாலும் அங்கதான் சாப்பாடு”.. அமைச்சர் உதயநிதி தகவல்!
சென்னை : நான் எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலையில் சாப்பிடுவது காலை உணவு திட்டத்தில் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு கொண்டு காலை சிற்றுண்டி திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அந்தத் திட்டத்தில் நானும் ஒரு பயனாளி எனப் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்கரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நானும் பயனாளி
சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலையில் சாப்பிடுவது காலை உணவு திட்டத்தில் தான். இந்த திட்டத்தில் நானும் ஒரு பயனாளி. காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக்குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

காலை உணவுத் திட்டம்
அரசுப்பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி கல்வி பயிலுவதை ஊக்குவிக்க 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்லும்போது, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனைச் சுட்டிக்காட்டியே, இத்திட்டத்தில் நானும் ஒரு பயனாளி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் செய்ததை 2 ஆண்டுகளில்
சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முந்தைய ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகள் செய்த பணிகளை திமுக அரசு 2 ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டது என்பதை நீங்கள் உணரலாம். 29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு பரிசளிக்கும்போது, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே பரிசளிக்க வேண்டும். 'ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள்' என்ற திட்டம் மூலம் வட்டார அளவில் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு பொருளைச் சந்தைப்படுத்த ரூ.5 கோடி மதிப்பில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுகவினருக்கு வேண்டுகோள்
நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற 3 மாதங்களில், திண்டுக்கல், சிவகங்கை, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று அமைச்சராக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டமும் நடத்தினோம். என்ன திட்டம் நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம். அதிமுக உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து முறையாக உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் கருத்துகளை ஆலோசனைகள் எங்களுக்கு வழங்க வேண்டும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications