கருணாநிதி ஒப்புதல் பெற்ற ”முரசொலி வாசகர் பேரவை”யை உருவாக்குகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் பெற்ற முரசொலி வாசகர் பேரவையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தடா ஓ.சுந்தரம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழர் திருநாள் மகிழ்வினைக் கழகச் சொற்பொழிவாளர்களோடு பகிர்ந்திட விரும்பி இளைஞர் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சர், கழக இளைஞரணிச் செயலர் தோழர் உதயநிதி, கடந்த 18.01.2024-இல் விடுத்த அழைப்பை ஏற்று , அமைச்சரின் 'குறிஞ்சி' இல்லத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 340-இக்கும் மேற்பட்ட தோழர்கள் அணி திரண்டோம்.

கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பாக நான் தலைவர் கலைஞரிடம்,'முரசொலி வாசகர் பேரவை' தொடங்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட்டு, அதனை எவ்வகையில் அமைக்கலாம் என ஒரு வரைவினை எழுதிக் கோப்பாக ஒப்படைத்தேன். தலைவர் மிகுந்த மகிழ்வோடு அதனை
எனக்கு முன்பாகவே படித்து, அவரது கைப்பட சில திருத்தங்களை எழுதினார்கள். அதில், எப்படி 'துக்ளக்' ஆட்கள் ஆண்டு தோறும் தமிழர் திருநாளன்று 'துக்ளக்' விழா நடத்துகிறார்களோ அப்படி நாமும் நடத்தி, தலைவர் கலைஞர் கலந்து கொண்டு வாசகர்கள் கேள்விக்கு நேரில் பதில் அளித்தல் என்றெல்லாம் எழுதியிருந்தேன். அதனை மிகவும் ரசித்து வரவேற்ற தலைவர், அந்தக் கோப்பின் முகப்பில்,' உதித்து விட்டான் செங்கதிரோன் தென் திசையில்! கொதித்தெழுவோம் நம் கொத்தடிமை தீர்வதற்கே!" என முழக்கமாகப் பொறித்திருந்ததைப் பார்த்துப் படித்து விட்டு, " இதை எங்கிருந்து எடுத்த பா?" என்றார். "ஐயா! 1950-களில் வந்துள்ள முரசொலி தலையங்கப் பகுதியில் நீங்க எழுதியுள்ள முகப்பு முழக்கம் தானுங்க ஐயா!" என்றேன். தலைவர் நல்ல 'மூடில்' இருந்ததால் அந்த அறையில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. உடன், பேராசியர், ஆற்காட்டார் தவிர ஏனையோர் இருந்தனர்.
தலைவர்," ஏம்பா..! இந்த முழக்கம் நாம் தனி நாடு கேட்ட காலத்தில் எழுதியது. இதுஇப்போது பொருத்தமாக இருக்காதே!" நான்," இல்லீங்க ஐயா! எப்பவுமே சரியா இருக்கும்"- இளங்கன்று பயம் அறியாத நிலையில் என் மறுப்பு! அடுத்த நொடி, என்மீது பாய்ந்து விழாத குறையாக உடனிருந்தோர்," தலைவர் சொல்றாரு...நீ மறுத்து பதில் சொல்ற.."என அதட்டியதும்... 'தலைவரிடம் தானே நாம பதில் சொல்றோம். இதிலென்ன தவறு?'
என வாடிப் போனேன் ஒரு நொடியில்! தாயுள்ளம் கொண்ட தலைவரோ தனது இடது கைத் துண்டை மேலும் கீழும் ஆட்டி, அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, “நீ சொல்லுப்பா..ஏன் மாற்ற வேண்டாம்?" "ஐயா! வங்க தேசத்துல முஜிபுர் ரஹ்மான் முதலில் மாநில சுயாட்சி தானே கேட்டாரு. அதனை மறுத்ததால் தானே போராட்டம் வெடித்து தனி நாடாக விடுதலை பெற்றது. நாமும் மாநில சுயாட்சி தானே கேட்கிறோம்.
தரலேனா,கிடைக்கலேனா எதிர் காலத்தில தமிழ்நாடும் தனி நாடாகிட போராட்டம் உறுதியா நடக்கும். அதனால.. இந்த முழக்கம் பொருத்தமா இருக்குமுங்க ஐயா"! தலைவர் முகம் மலர்ந்து சிரித்து விட்டார்; உடனிருந்தோர் அனைவரும் அப்போது சிரித்தனர். ஓ...தலைவர் சிரிச்சதால.. இவுங்களும் சிரிக்கிறாங்களா.. இல்ல நான் சொன்ன பதிலுக்காக சிரிச்சாங்களா என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன். தலைவர்," ஏன் யா..இப்படி சிந்திக்கிற இளைஞர்களும் நம்ம இயக்கத்துல இருக்கீங்களா?..என்றபடி ஒரு தாளை எடுத்து, “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"! என எழுதிக் கொடுத்து, இதனையே முகப்பு முழக்கமாக வைக்கும்படி பணித்தார்கள்.மேலும், அட்டையில்," ஆற்காடு வீராசாமி அவர்கள் இது பற்றி ஆய்வு செய்க!" என்ற குறிப்பை எழுதி, ஆற்காட்டாரிடம் அனுப்பி வைத்தார்கள். வாசகர் பேரவைத் தொடக்க விழா தேதி கூட குறிக்கப்பட்டும் ஏதோ ஒரு காரணத்தால் அது நடைபெறாமலேயே நின்று போய்விட்டது.
அந்தக் கோப்பின் படிகளைக் கடந்த 20-ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்ணெணக் காத்து வைத்திருந்தேன் தலைவர் கை திருத்தத்தோடு! ஓரிரு முறை கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களிடம் இது பற்றி எடுத்துரைத்தும், நகல் எடுத்துக் கொடுத்தும் எதுவும் நடக்காத நிலை! ஆனாலும், தோழர் உதயநிதியின் கொள்கை வழிப்பட்ட செயல் பாடுகள், திராவிடரியக்கக் கொள்கைத் தெளிவு காரணமாகக் கவரப்பட்டு, அவரை சந்தித்த வேளையில்,' முரசொலி வாசகர் பேரவை' அமைப்புக் கோப்பை ஒப்படைத்து, தலைவர் கலைஞர் கையால் எழுதியுள்ள குறிப்புகளைச் சுட்டிக் காட்டினேன். அமைச்சர் சில நிமிடங்களில் அதனை புரட்டிப் படித்தபடியே மகிழ்ந்தார். அப்படியே நான் எழுதியுள்ள,'கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்' நூலையும், திவிக வெளியிட்ட நான் எழுதிய,' ஆர்.எஸ்.எஸ் கேள்விகளுக்கு அதிரடிப் பதில்கள்' எனும் சிறு நூலையும் தோழரிடம் கொடுத்தேன். நிழற்படம் எடுக்க அறைக்குள் சென்ற போதே,'வணக்கம் தோழர்' என்று நான் விளித்த நொடி முதல் மிகவும் தோழமை கொண்டவராக உரையாடினார். விடைபெறும்போது,' இதனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். செயல்படுத்த உங்களால் மட்டுமே இயலும்' என்றேன். ஆமோதித்து சிரித்தவரை வாழ்த்தி விடை பெற்றேன்! நீண்ட காலம் கனமாக இருந்த நெஞ்சு லேசானது கடமையைச் செய்த நிறைவில்! . இவ்வாறு திமுக நிர்வாகி தடா ஓ.சுந்தரம் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications