ஈரோட்டில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. 2 நாட்கள் தீவிர பிரச்சாரம்.. தொண்டர்கள் உற்சாகம்!
ஈரோடு கிழக்கில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்.19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏராளமான அமைச்சர்கள் ஈரோட்டில் வாக்கு சேகரித்து வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

வேட்பாளர்கள்
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே .எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார்கள். அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகனும், அமமுக வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது.

வாக்கு சேகரிப்பு
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதேபோல் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தொண்டர்களும், நிர்வாகிகளும் தீவிரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
திமுக தரப்பில் ஈரோடு இடைத்தேர்தலுக்காக 11 அமைச்சர்கள் தலைமையிலான படை களமிறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல் பிரச்சாரம்
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் மூலம் செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications