தப்பிச்சோம்.. நமக்கு எந்த பாதிப்பும் இல்லையே? ஆறுதல் பெருமூச்சுவிடும் அந்த 2 அமைச்சர்கள் -ஜஸ்ட் மிஸ்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்று இருக்கும் நிலையில், பதவிநீக்கம் செய்யப்படுவதாக கணிக்கப்பட்ட 2 அமைச்சர்கள், தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆறுதல் அடைந்து இருக்கிறார்கள். யார் அவர்கள்? விரிவாக பார்ப்போம்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
திமுக பொருளாளர் டிஆர் பாலு மகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா இன்று அமைச்சராக பதவியேற்று இருக்கிறார். இன்று காலை ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்து இருக்கிறார்.

அத்துடன் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி எம்.எல்.ஏ. சா.மு.நாசரின் பால்வளத்துறை இலாக்கா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் வசம் வழங்கப்பட்டு இருக்கிறது. மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக இருந்த நிதித்துறை, தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தங்கம் தென்னரசு வகித்த தொழிற்துறை இலாக்கா, புதிதாக அமைச்சரவையில் இணைந்து இருக்கும் டிஆர்பி ராஜாவிடமும், தமிழ் வளர்ச்சித்துறை இலாக்கா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த மாத இறுதியில் செய்தி வெளியானவுடனே 2 அமைச்சர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
தீண்டாமை கொடுமைகள், வேங்கைவயல் விவகாரத்தில் கயல்விழி செல்வராஜின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு திருப்தி அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அமைச்சர் கயல்விழிக்கு வாரியப் பதிவியும் வழங்கப்பட்ட நிலையில் அவர் அமைச்சரவையில் நீக்கப்படுவது உறுதி என்றே பேச்சு அடிபட்டது.
அவருக்கு பதிலாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கயல்விழி செல்வராஜ் அமைச்சரவையில் நீக்கம் செய்யப்படவில்லை. அதேபோல் அவரது இலாக்காவும் மாற்றப்படவில்லை.

அதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சட்டசபைக்கு தேர்வான தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சராக இருக்கும் கா.ராமச்சந்திரனும் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு முன்பாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், சுற்றுலா துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவரது செயல்பாடுகள் மீது தலைமைக்கு பல்வேறு புகார்கள் பறந்ததால் அவர் மீது நடவடிக்கை பாய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. சுற்றுலா துறை இலாக்காவும் மாற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications