சிவில் சட்டம்.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? தெரிஞ்சே ஆகணும்.. தமிமுன் அன்சாரி ஆவல்!
சென்னை: பொது சிவில் சட்டம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வினவியுள்ளார்.
மத்திய அரசின் பொறுப்பற்ற செயல், எத்தகைய ஜனநாயக போராட்டங்களை உருவாக்கப் போகிறது என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தேர்தல் அரசியல்
தேர்தல் அரசியலில் ஒரு சார்பு வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கோடு, ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை விரோத போக்குகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொது சிவில் சட்டத்தை திணித்திடும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.இதற்கான பரிந்துரையை வடிவமைத்திட, பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற செயல்
இது எத்தகைய பரிந்துரையை வழங்கும் என்பது தெரியாததல்ல. பொறுப்பற்ற இவர்களின் இப்பாதக செயல், எத்தகைய ஜனநாயக போராட்டங்களை உருவாக்கப் போகிறது என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும். இந்நிலையில் கேரளா, மே.வங்கம், ஒரிஸா போன்ற மாநில அரசுகள் இதில் அமைதியாக இருக்கும் போது, தமிழக அரசு நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் இதற்காக ஒரு கமிட்டியை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒரே பொது சிவில்
இது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டை, முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒரே மதத்தில் பல பிரிவுகள், பல கலாச்சாரங்கள், வெவ்வேறு பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், திருமண திட்டங்கள் நம் நாட்டில் நிலவுகிறது. இச்சூழலில் எல்லா மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

ஐனநாயக சக்திகள் ஓரணியில்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்மை கலாச்சாரமே நமது வலிமை என்பதை உணர்ந்து அனைத்து ஐனநாயக சக்திகளும் ஓரணியில் நின்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications