“ஆளுநர் ரவி மீது தமிழக அரசு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை!
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். சட்டசபையில் நேற்று ஆளுநர் ரவி வந்துவிட்டு, ஆளுநர் உரையைப் படிக்காமல் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிமுன் அன்சாரி இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், வடமேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்கள் கூட்டத்தில், வடமேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய உறுதி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, "வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான எங்களுடைய கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி வாகை சூடும். அதற்கு எங்களுடைய களப்பணிகள் நிச்சயமாக பெரும் பங்கு ஆற்றும் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளுநர் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மரபுகளை உடைத்தெறியும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை முடக்கும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது. உடனடியாக மத்திய அரசு இந்த ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நிழல் யுத்தத்தை நடத்தக்கூடிய போக்கை ஆளுநர்கள் தொடர்வதை ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது. ஆளுநர் தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்தார் என்பதற்காக அவர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, "மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹஜ் கமிட்டியில் முதன்மை செயல் அதிகாரியாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. ஹஜ் என்பது முஸ்லிம்களுடைய ஐந்து கடமைகளில் ஒன்று. அதில் புனித பயணம் மேற்கொள்ள கூடியவர்களுடைய விவகாரங்களை கையாள்வதற்கு எத்தனையோ முஸ்லிம் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். உயர் நிலையில் இருக்கக்கூடிய எத்தனையோ அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள்.
ஹஜ் கமிட்டி நிர்வாகத்திலும், முஸ்லிம் அல்லாதவர்களை நியமனம் செய்வது என்பது மத்திய பாஜக அரசின் சிறுபான்மையினர் விரோத போக்கை வெளிகாட்டுவதாக இருக்கிறது. ஏற்கனவே வக்பு வாரியத்தில் கண்டிப்பாக இரண்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு சட்ட நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஹஜ் கமிட்டியிலும் அவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications