நிர்வாண போராட்டம் வேண்டாமே.. நாகரீகமான முறையில் விவசாயிகள் போராட வேண்டும்.. ஸ்டாலின் வேண்டுகோள்
விவசாயிகளின் நிர்வாண போராட்டத்திற்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: "நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு நாகரீகமாக போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் தங்களின் வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும்"என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தினர். இதற்காக டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், விவசாயிகள் இப்படி போராடும் நிலைமைக்கு காரணம் பாஜக அரசுதான் என்று குற்றம் சொல்லி உள்ள ஸ்டாலின், விவசாயிகளுக்கும் போராட்டம் குறித்து சில வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ள முக்கிய அம்சம் என்னவென்றால்:

அமைதி போராட்டம்
"விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்யாமல், அவற்றினை நிறைவேற்ற பிடிவாதமாக மறுத்து, அறவழி அமைதிப் போராட்டங்களையும் துளியும் மதிக்காமல் பாஜ அரசு அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசின் ஆணவப் போக்குதான் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழுமுதற் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கண்டனத்திற்குரியது
விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மத்திய - மாநில அரசுகளின் போக்கு கண்டத்திற்குரியது. என்றாலும், விவசாயிகள் தங்கள் அறவழிப் போராட்டங்களை அமைதியாகவும், நாகரீகமாகவும், நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ஆதரிக்க முடியாது
தமிழ்நாட்டின் பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், தமிழக மக்களே முகம் சுழிக்கும் வகையிலும் நடைபெறும் நிர்வாணப் போராட்டங்களை திமுக சார்பில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது. இத்தகைய போராட்டமுறைகள், போராட்டத்தின் மைய நோக்கத்தை திசைதிருப்புவதாக அமைந்துவிடும் என்பதைச் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாகரீகமான அறவழி
ஆகவே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் இதுபோன்ற நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு, தமிழகத்தின் மாண்பையும், மதிப்பையும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான, நாகரீகமான அறவழி அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications