குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல் மக்களை ஏமாற்றிய திமுக.. ஸ்டாலினுடன் எடப்பாடி காரசாரம்
சென்னை: சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது தண்ணீர் பிரச்சினை குறித்து மட்டும் விவாதிக்கக் கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது.
அத்திவரதர் தரிசனத்துக்கு ஆதார் அவசியம்- கோவிலை சுற்றி கழிவறைகள்- கண்காணிப்பு கேமராக்கள்!
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் மத்தியிலும் ஆட்சி மாநிலத்திலும் ஆட்சி என்றீர்கள். மக்கள் உங்களை தொங்கலில் விட்டுவிட்டார்கள். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவதுபோல மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்துள்ளது.
ஆர்கே நகரில் டெபாசிட் இழந்த திமுக வெற்றி பெற முடியும் என்றால் எங்களால் ஏன் வெற்றி பெற முடியாது? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது ஸ்டாலின் பேசுகையில் எதைவைத்து எங்கள் வாக்குறுதிகளை பொய்யான வாக்குறுதிகள் என கூறுகிறீர்கள். விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.