குட்டி குட்டி டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள்: உருகிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி, குட்டி மழலை டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள் எனத் தெரிவித்து, குழந்தைகளுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என்றார். இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவின் சிற்பி என அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தினார் நேரு. அதனால் அவரது மறைவுக்குப் பின், அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அனைத்து மாநிலங்களிலும் நேருவின் பிறந்தநாள் சிறப்பாகப் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேருவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

குழந்தைகள் தினத்தையொட்டி, "இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம் தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்" என்ற ஜவஹர்லால் நேருவின் வரிகளை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பகிர்ந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "தூய்மையான அன்பு, அளவற்ற உற்சாகம் ஆகியவற்றை நமக்கு வாரி வழங்கும் குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம். குழந்தைகளின் சிரிப்பு தான் நம் உலகத்துக்கு ஒளியூட்டுகிறது. பகிர்ந்தளித்தல், இரக்கவுணர்வு, நேசம், ஒற்றுமை, சமத்துவம், பேரன்பு என குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான பண்புகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி, குட்டி மழலை டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications