திமுக ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைத்துள்ளனர்.. ஸ்டாலின்
சென்னை: சென்னையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், திமுக ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைத்துள்ளனர் என்று சாடி உள்ளார். அவர் யாரை சொல்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முறைப்படி துவங்கினார். பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, அதிரடியாக, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போர் ஒவ்வொருவருக்கும் தலா 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

ஸ்டாலின் விமர்சனம்
இந்த அறிவிப்பை விமர்சனம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின், .கொரோனா காலத்தில் 5000 ரூபாய் கேட்ட போது வழங்க மறுத்த முதல்வர் தனது சுயநலத்திற்காக, தேர்தல் ஆதாயத்துக்காக இப்போது இந்த நிதி உதவியை அறிவித்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. கொரோனா நோய் தொற்று காலம் மற்றும் புயல் பாதிப்பு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க நான் கேட்டுக்கொண்டேன். அதை முதல்வர் வழங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்றார்.

எடப்பாடியார் பதிலடி
இதற்கு பதிலடியாக, பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த பொங்கல் காலத்திலும், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போது கொரோனா நோய் தொற்று மற்றும் புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதனால் நிதி உதவியை உயர்த்தி வழங்குகிறோம். கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்வது தவறா என்று எதிர் கேள்வி எழுப்பி உள்ளார்.

முக்கிய அறிவிப்பு
இதனிடையே முதல்வர் நேற்று பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் அரசயல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தான் திமுக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திமுக முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தலைவர் ஸ்டாலின் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளார். காத்திருங்கள். என தெரிவிக்கப்பட்டது.

16,000 கிராம சபைக் கூட்டங்கள்
முக ஸ்டாலின் என்ன அறிவிப்பு வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சென்னையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. திமுகவினருடனான கலந்துரையாடலுக்கு பின்ன முக ஸ்டாலின் கூட்டத்தில் உரையாற்றினார. அப்போது பேசிய அவர், தமிழகத்தி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தான் வெல்லப்போகிறோம். ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விடமாட்டார்கள். அதற்காக போராட வேண்டும். திமுக சார்பில் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினரின் குறி
திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே திமுகவினர் லட்சியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியனின் வேட்பாளர்கள் கருணாநிதியின் வேட்பாளர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்துங்கள். அர்ஜூனன் குறிபோல திமுகவினரின் குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.

200 தொகுதி
பணமா? மனமா என்றால், பணத்தை வெல்லும் சக்தி மக்களின் மனங்களில் உண்டு என்பதை நிரூபிக்க நாம் வேண்டும். நமக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். மும்முனைத் தாக்குதலில் நாம் மாட்டிக்கொண்டாலும் 6-வது முறையாக நாம் தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை களைய வேண்டும். தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றியடைய வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.கிராம சபைக் கூட்டங்கள் முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்லவுள்ளேன்" என்றார்.

யாரை சொல்கிறார்
இதனிடையே இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது திமுக ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டயப்படுத்தி கட்சித் தொடங்க வைத்துள்ளனர் என்று சாடினார். யாரை மனதில் வைத்து இதை அவர் சொல்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை. ரஜினியை சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் ரஜினி மட்டுமே இப்போதைக்கு கட்சி தொடங்க போகிறார். தற்போதைய நிலையில் ரஜினியுடன் இணைய கமல் அழைப்பு விடுத்து வருகிறார். இன்னொரு புறம் கமல் திமுக உடன் கூட்டணி வைப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது. திமுக உடன் ஒரு வேளை கமல் இணைந்தால், ரஜினி கமல் இணைய வாய்ப்பில்லை. எனவே ரஜினியை ஸ்டாலின் குறிப்பிடுகிறாரா என்ற முணுமுணுப்பு எழுகிறது.












Click it and Unblock the Notifications