கொடநாட்டில் என்ன நடந்தது.. மர்மம் என்ன.. நீதி விசாரணைக்கு ஆணையிடுங்கள்.. ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கொடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார்.
கொடநாடு விவகாரத்தை வெளியிட முடியாத அளவுக்கு தமிழக ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
நீதி விசாரணை தேவை
நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார்; இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை. கொடநாடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் எப்போது?
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
ஸ்டாலின் விளக்கம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடரவில்லை, முறையாக நடத்தவேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம்.
முதல்வருக்கு பதில்
2006ல் 4 ஊராட்சி மக்களிடம் சுமுகமாக பேசி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுகதான். மு.க.ஸ்டாலின் துணை முதல்வர், அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு சென்றாரா என முதல்வர் பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.
அமைச்சர் சவால்
இதற்கிடையே, கொடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும், அண்ணாநகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாஷா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.