மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: காயிதே மில்லத்தின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
காயிதே மில்லத்தின் 124ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத் பிறந்த நாள் அரசு விழாவாகவும் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுதாரிக்காவிட்டால்.. மேலும் மேலும் கட்சி கரைந்தால்.. அரசியலில் அடுத்த விஜயகாந்த்.. தினகரன்தான்!
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த , முக ஸ்டாலின் கூறுகையில், "காயிதே மில்லத் தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாக கொண்டு வர வேண்டும் என குரல் கொடுத்தவர்.
இப்போது நாடு முழுவதும் மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பினை தொடர்ந்து இந்தி திணிப்பை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அனைத்து அரசு அலுவலங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என்பதை நான் .இந்த நேரத்திலே உறுதியாக தெரிவிக்கிறேன்" என்றார்.