கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் பி எச் பாண்டியன்.. ஸ்டாலின் இரங்கல்
Recommended Video
சென்னை: முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் இதய நோய் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலமானார்.
அவருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறுகையில் தமிழக முன்னாள் சபாநாயகரும், மூத்த வழக்கறிஞருமான பி.எச் பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்பிக்கை
நான்குமுறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை திருநெல்வேலி மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி - சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கம்பீரக் குரல் எழுப்பி, தொகுதி மக்களுக்காக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் வாதாடியவர். சட்டப் பேரவையின் தலைவருக்கு "வானளாவிய அதிகாரம்" இருக்கிறது என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்திய அவர், மறைந்த முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.

கருணாநிதி
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பி.எச். பாண்டியன் மீது தலைவர் கருணாநிதி அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை நான் அறிவேன்; அதற்குக் காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த திராவிட நோக்கும், பார்வையும், சுயமரியாதையும், போர்க்குணமும் ஆகும்.

எளிதில் மறக்க முடியாது
இத்தகைய தன்மைகள் தன்னிடமிருந்து பிரிக்க முடியாதவை என்பதை அஞ்சா நெஞ்சத்துடன் பிரகடனப்படுத்தும் வகையில் தனது கருத்துக்களை ஆணித்தரமாகவும், சட்டபூர்வமாகவும் எந்த அரங்கத்திலும் எடுத்து வைப்பதில் பி.எச். பாண்டியன் அவர்களுக்கு நிகர் அவர்தான் என்பதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

வழக்கறிஞர்
அவரது மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பி.எச் பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications