'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு’.. இசையமைத்தவருக்கு முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: 'ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு' என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த ஜெரார்டு ஃபெளிக்ஸின் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின், தனது மகன் உதயநிதியுடன் சென்று மரக்கன்று கொடுத்து வாழ்த்தினார்.
'ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு,, அதுதான், அதுதான் மக்களோட முடிவு என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இந்த பாடல் தான் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் ஒலிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டதில் இருந்து அது முடிந்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் வரை மிகப்பெரிய தாக்கத்தையும் இந்த விடியல் பாடல் ஏற்படுத்தியது. அதற்கு காரணம் பாடலின் இசையும் வரிகளும் எளிதாக மக்களை சேரும் வகையில் இருந்தது தான்.

ஸ்டாலின் தலைமை
10 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாமல் இருந்த திமுக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் தலைமையில் சந்தித்த முதல் தேர்தல் ஆக 2021 தேர்தல் இருந்தது. இந்த தேர்தலில் திமுக வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் களம் இறங்கியது.

ஸ்டாலின் தான் வாராறு
அப்போது ஸ்டாலின் தலைமைக்கு வலிமை சேர்க்கும் வகையிலும், மக்கள் மத்தியில் ஸ்டாலினின் புகழை பரப்பும் நோக்கிலும் உருவாக்கப்பட்டது தான் 'ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு' என்ற பாடல். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.

திருமண வரவேற்பு
திமுக 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் விடியல் பாடலைத்தான் ஒளிபரப்பியது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் ஜெரார்டு ஃபெளிக்ஸ், இவர் பிரேஷிசாந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெரார்டு ஃபெளிக்ஸ் பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

பங்கேற்ற முதல்வர்
இந்த திருமண வரவேற்பில் ஜெரார்டுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடன் சென்று கலந்து கொண்டார். அவருக்கு பரிசும் அளித்தார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு' என்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி ஜெரார்டு - பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினோம். மணமக்கள் தமிழ் போல் வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications