"வெட்டி, ஒட்டி, திரித்து".. யாரும் உணர்ச்சி வசப்படகூடாது.. கண்ணியம் காக்கணும்.. ஸ்டாலின் வார்னிங்!
திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்
சென்னை: "பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கழகத்தினர் யாரும் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது... அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும்" என்று திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் களம் சூடாகி வருகிறது.. இருக்கிற சூடு போதாமல் வருமானவரித்துறையினர் ஒரு பக்கம் ரெயிடு நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
மற்றொரு பக்கம் கருத்து கணிப்புகள் ஒவ்வொரு விதமாக வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் திமுகவுக்கே வெற்றி என்ற ரீதியில் கணிப்புகள் சொல்லப்பட்டு வருகின்றன..
நேத்துதான் ஸ்டாலின் சொன்னாரு, "சிம்ம சொப்பனம்".. அதற்குள் செந்தில்பாலாஜி மீது பாய்ந்த குற்றபத்திரிகை
கணிப்பு
இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொகுதியில் களத்தில் நின்று பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர், தொண்டர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதை ஏற்று திமுக நிர்வாகிகளும் அதிமுகவுக்கு டஃப் தரும் வகையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
அதிர்ச்சி
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக திமுகவின் சில முக்கிய பிரமுகர்கள் சர்ச்சையாக பேசியதாக கூறி, சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன.. இது திமுக தரப்பை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது... இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, திமுக தலைவரே நேரடியாக தலையிட்டுள்ளார்.. இது தொடர்பாக கழக உறுப்பினர்களுக்கும், வேட்பார்களுக்கும் அறிவுறுத்தி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
அறிக்கை
'அன்புடைய கழக உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சொற்கள்
பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.
வெட்டி - ஒட்டி
தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.