டாடா சுமோவுக்கு குட் பை! யூனியன் சேர்மன்களுக்கு ஸ்கார்பியோ கார்! அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கலாம்!
சென்னை: ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் அலுங்காமல் -குலுங்காமல் பயணிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வாகனமாக புதிய ஸ்கார்பியோ கார்களை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதுவரை யூனியன் சேர்மன்கள் பயன்படுத்தி வந்த பழைய டாடா சுமோ வாகனங்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அவ்வொன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன.

13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் 22.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களைமுதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 30 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தற்போது வரை 277 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 205 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications