மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய அறிவிப்பு.. 2 இடங்களில் வேலைவாய்ப்புகள்.. மகிழ்ச்சியில் தமிழகம்
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று துவங்கி வைக்கிறார் ஏற்றுமதி மாநாடு
சென்னை: மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து, வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.

மாநாடு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் "ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கவும் மற்றும் விழா பேருரையாற்றவும் இசைவு அளித்துள்ளார்கள். உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

கண்காட்சி
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன. இக்கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 அன்று மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

ஒப்பந்தங்கள்
துவக்க விழாவில் முதலமைச்சர் "தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை" மற்றும் "சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு" ஆகியவற்றை வெளியிடுவார். இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன.

அதிகாரிகள்
இவ்விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குநர் சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தங்கம் தென்னரசு
இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.. அதன்படியே இன்றைய நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.. "தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை" மற்றும் "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு" ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சிறப்பு பொருட்கள்
மேலும், "ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, "தொழில் வளர்ச்சி என்பது அனைத்து துறை வளர்ச்சி என்று நம்புவோம். தொழில் வளர்ந்தால் அனைத்து துறைகளும் வளலும். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை உலக அளவில் சந்தைப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.

வேலைவாய்ப்புகள்
மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். Made in India என்பதையும் தாண்டி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம், Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications