முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன்! சென்னையிலேயே இருங்க.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு?
சென்னை: ''சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்போகிறேன். அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். வரும் 10ம் தேதி வரை சென்னையை விட்டு எம்எல்ஏக்கள் வெளியே செல்ல கூடாது. சென்னையிலேயே தங்க வேண்டும்'' என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் திணறும் நிலையில் இந்த உத்தரவின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவு வெளி வந்தாலும் கூட பரபரப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. மணிக்கு மணி பரபரப்பு தொற்றி கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காதது தான்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாமல் விஜய் முதல்வராக முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த பரபரப்புக்கு நடுவே தான் அதிமுக தனது எம்எல்ஏக்களை புதுச்சேரி ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. அங்கு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், புதிய எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில ஸ்டாலின் பேசியபோது, ''சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறேன். இந்த முடிவு கட்சியின் நலன் சார்ந்ததாக இருக்கும். என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதனால் சென்னையை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது. வரும் 10ம் தேதி வரை சென்னையிலேயே இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதுதான் தற்போது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தமிழகத்தில் விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் திமுக - அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த திமுக - அதிமுக கூட்டணியில் மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தான் வேண்டும். ஆனால் அதைவிட திமுக - அதிமுக கூட்டணியில் அதிக எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் முக ஸ்டாலினின் இந்த உத்தரவு என்பது திமுக - அதிமுக கூட்டணி ஆட்சியை மையப்படுத்தி போடப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications