இடைத்தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்தாலும் ஆட்சி அமைக்கப் போவதில்லை.. ஸ்டாலின் கணக்கு!
சென்னை: சட்டசபை இடைத்தேர்தல்களில் திமுக அதிகமான இடங்களில் வென்று பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சி அமைக்காது; சட்டசபை பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத்தான் அது திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் யார் ஆட்சி அமையும்? சட்டசபை இடைத்தேர்தல்கள் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதுதான் அரசியல் களத்தில் ஹாட் டாபிக். இந்த அனல் பறக்கும் விவாதங்களுக்கு மத்தியில் தகுதி நீக்கம் என்கிற அஸ்திரத்தை முதல்வர் எடுத்திருக்கிறார்.
இதற்கு போட்டியாக திமுகவும் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் என ஆட்டத்தை ஆடி வருகிறது. முதல்வர் எடப்பாடியைப் பொறுத்தவரையில் தமக்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் என்பதற்காக தகுதி நீக்கம் என்கிற கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டு வருகிறார்.
தேர்தல் முடியும் வரைதான் திமுகவுக்கு சாய்ஸ்.. மே 23க்கு பிறகு அதிமுக கை ஓங்கும்?.. பரபரக்கும் களம்
அதிமுக அரசு நீடிக்குமா?
லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே முதல்வர் எடப்பாடியின் இந்த வியூகம் எடுபடுமா? இல்லையா? என்பது தெரியவரும். மத்தியில் மோடி அல்லாத பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் கூட அதிமுக அரசு நீடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
திமுகவும் பொதுத்தேர்தலும்
அதே நேரத்தில் திமுகவைப் பொறுத்தவரை சட்டசபை பொதுத்தேர்தலை சந்திப்பது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். தற்போதைய இடைத்தேர்தல்களில் திமுக வென்று பெரும்பான்மையே கிடைத்தாலும் ஆட்சி அமைக்கப் போவதில்லையாம்; பொதுத் தேர்தலுக்குத்தான் பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளனராம்.
பெரும்பான்மையை விரும்பும் ஸ்டாலின்
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக பிரமுகர்கள், ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் முழு பலத்துடன் அமர வேண்டும் என்றுதான் விரும்புகிறார். இப்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையே கிடைத்தாலும் காங்கிரஸ் தயவு தேவை. அதை ஸ்டாலின் விரும்பவில்லை. மேலும் எப்படியும் 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தலையும் சந்திக்க வேண்டும். இப்போது ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளில் கெட்ட பெயர் வந்துவிட்டால் சிக்கலாகிவிடும். அதனால் இப்போது ஆட்சி அமைக்க வேண்டாம் என நினைக்கிறாராம் ஸ்டாலின்.
150க்கும் மேல் திமுக போட்டி
அவரைப் பொறுத்தவரை திமுக எம். எல். ஏக்களின் பலத்தில் மட்டுமே தாம் முதல்வராக வேண்டும் என்பது கணக்கு. வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 50 தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு இதர இடங்களில் திமுகவே போட்டியிட இருக்கிறதாம்.
ஆட்சி மாற்றம் உறுதி என நம்பும் திமுக
அப்படி செய்தால்தான் முழுமையாக திமுக எம் எல்.ஏக்கள் பலத்தில் முதல்வராக உட்கார முடியும் என நினைக்கிறாராம் ஸ்டாலின். எப்படியும் இடைத்தேர்தல்களில் தங்களுக்கே வெற்றி கிடைக்கும். ஸ்டாலினும் இப்படி ஒரு வியூகத்துடன் இருக்கிறார். அதனால்தான் துரைமுருகன் போன்றவர்கள் 'ஆட்சி மாற்றம்' உறுதி என பேசிவருகின்றனர் என்கின்றனர்..