அன்று தியாகராஜ பாகவதரின் மனைவிக்கு உதவிய கருணாநிதி.. இன்று பேரனுக்கு உதவிய ஸ்டாலின்!
சென்னை: பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
வறுமையில் வாடும் இவருக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; "எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திரக் கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார்.

தியாகராஜ பாகவதர்
அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.

வீடு ஒதுக்கீடு
தமிழ்த் திரையுலகில் மிக பிரபலமாக அக்காலகட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்" இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருணாநிதி உதவி
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருவதை அறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி, அவருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இதன்படி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்று வழங்கப்பட்டது.

உதவி செய்த ஸ்டாலின்
மேலும் 1999ம் ஆண்டிலும் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார். இப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராமுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications