ஸ்டாலின் போடும் 'Sketch'.. இந்தி திணிப்பு, அனைத்து கட்சி கூட்டம்- அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆப்பு!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக திமுகவும் தமிழக அரசும் அடுத்தடுத்து தீவிரமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மும்மொழிக் கொள்கையின் பெயரில் இந்தி மொழி திணிப்பு, புதிய கல்வி கொள்கையை காரணம் காட்டி தமிழ்நாட்டுக்கான நிதி தர மறுப்பு, தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் கை விரிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கை ஆகியவற்றை முன்வைத்து திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் வியூகம், அதிமுக தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைவதை தடுக்கும் வகையில் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி தொடருவதில் இதுவரை எந்த ஒரு விரிசலும் இல்லை.

திமுக கூட்டணிக்கு மாற்றாக இதுவரை அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகவும் இல்லை. தற்போதைய நிலையில் அதிமுக, பாஜக தனித்தனி கூட்டணிகளாகவே இருக்கின்றன. அத்துடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனியாக களத்தில் நிற்கின்றன.
அதிமுக- பாஜக கூட்டணி வியூகம்
தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இணைந்து கூட்டணி அமைத்தால் அதில் திமுகவுக்கு எதிரான கட்சிகள் இணையும்; இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகளை அந்த கூட்டணி ஒருசேர பெற முடியும்; திமுகவுக்கு தேர்தல் களத்தில் பெரும் நெருக்கடியை தர முடியும் என்கிற அடிப்படையில் டெல்லி பாஜக மேலிடமும் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு முயற்சித்து கொண்டிருக்கிறது. மேலும் அதிமுகவின் பிளவுபட்ட அத்தனை அணிகளையும் ஒருங்கிணைக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்கவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதிமுக- தவெக கூட்டணி முயற்சி
இன்னொரு பக்கம், பாஜகவை தவிர்த்துவிட்டு அதிமுக- தமிழக வெற்றிக் கழகம் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கவும் திமுகவுக்கு எதிரான சக்திகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நடிகர் விஜய் தரப்போ, அதிமுகவை ஆட்சியில் அமரவைக்கவா கட்சியை தொடங்கி இருக்கிறோம்? எங்கள் தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்குமா? என எதிர்கேள்வி கேட்டு அலறவைக்கிறது. இதனால் அதிமுக- தவெக கூட்டணிக்கு சாத்தியமே இல்லாத நிலைதான் இருக்கிறது.
திமுகவின் வியூகம்
இந்த நிலையில் அதிமுக- பாஜக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைவதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமையும் இருக்கிறது. இதனால் பாஜகவை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனிமைப்படுத்துகிற நகர்வுகளை முழுவீச்சில் திமுக மேற்கொண்டு வருகிறது.
பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு
மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி தர மறுப்பு விவகாரங்களில் பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டன. பாஜக ஆதரவு ஓபிஎஸ், டிடிவி தினகரன் உட்பட அனைவருமே மத்திய அரசுக்ககு எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர். இதன் அடுக்கட்டமாக மொழிப் போர் நடத்துவோம் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அனைத்து கட்சி கூட்டம்
தற்போது பாஜகவை முற்றிலும் தனிமைப்படுத்தும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை ஆளும் திமுக அரசு கையில் எடுத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் லோக்சபா தொகுதிகள் 38-ல் இருந்து 31 ஆக குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்காக மார்ச் 5-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதில் மொத்தம் 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆப்பு
சட்டசபை தேர்தல் பணிகள் விரைவில் முழுவீச்சில் தொடங்கப்படும் நிலையில் பாஜக- தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் எதிரான கட்சி; மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானது என்ற பிம்பத்தை வலுவாக கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது திமுக. இதன் மூலம் பாஜகவுடன் அதிமுக கூட்டணியே சேர முடியாத நெருக்கடியையும் உருவாக்குகிறது திமுக. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவதைத் தடுத்துவிட்டால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்பதாலேயே இந்த வியூகத்தை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications