சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு படுதோல்வி... மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக தமிழக காவல்துறையை அதிமுகவின் கைப்பாவையாக மாற்றியுள்ளதாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசு படுதோல்வி
"பொது அமைதியைக் காப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தமிழகம் திறம்படச் செயல்பட்டுள்ளது" என்ற முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் பேச்சை, 'பச்சைப் பொய்' என தற்போது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபித்துள்ளது. 'கூவத்தூர்' கொண்டாட்டம் மூலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. பழனிசாமியின் முதல் இரண்டு ஆண்டுகளான - 2017, 2018-ம் ஆண்டுகளுக்குரிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு எப்படி படுதோல்வியடைந்து பரிதாபமாக நிற்கிறது என்பது விளங்கும்.

மக்கள் அச்சம்
இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர், சிறப்புச் சட்டங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின் அந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையே 4.20 லட்சம், 4.99 லட்சம் என்று உயர்ந்து விட்டன. குற்றச் செயல்களும் 18.61 சதவீதம் அதிகரித்து விட்டன. கொலைக் குற்றங்களில் சென்னையில் 11.69 சதவீதமும், கோவையில் 47.62 சதவீதமாகவும் அதிகரித்து; மாநகரம் இரண்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான சூழலை அ.தி.மு.க. ஆட்சி உருவாக்கியுள்ளது.

விறுவிறு உயர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்களில்; கோவையில் 40.79 சதவீதமாகவும், சென்னையில் 18.54 சதவீதமாகவும் அதிகரித்து; பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநகரங்களாகச் சென்னையையும், கோயம்புத்தூரையும் மாற்றிக் காட்டியதுதான் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆட்சியின் சாதனை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. ஆட்சி தடுமாறுகிறது என்பதைப் பகிரங்கப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

கை வந்தக் கலை
அனைத்திற்கும் மேலாக, போலீஸ் பாதுகாப்பின்போது (கஸ்டடியில்) நிகழும் மரணங்களில், இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்த படியாக, தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. மனித உரிமைகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஆட்சியை முதலமைச்சர் திரு. பழனிசாமி நடத்தி வருவது, ஆதாரபூர்வமாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 'கணக்கை மறைப்பது', தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அறிந்து எண்ணிக்கையைக் குறைப்பது, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்குக் கை வந்த கலையாகி - முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தையும் குறைத்து விட்டார்.

காவல்துறை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்குக் காரணமாகி - மிகச்சிறந்த தமிழகக் காவல்துறையை தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் மயமாக்கி - அதை அ.தி.மு.க. சொன்னபடி ஆடும் 'கைப்பாவையாக' மாற்றி, இன்றைக்கு மக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவுடிகள் ராஜ்யம்
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சியாக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி - மாநிலத்தின் பொருளாதார - தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி; அமைதிக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே மிகப்பெரிய சாபக்கேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் 'ரவுடிகள் ராஜ்யத்திற்கு' மாநில அளவிலான 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என்று, ஆதாரங்களின் அடிப்படையில், பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.












Click it and Unblock the Notifications