அப்பாவிடம் கூட அடி வாங்கியது இல்லை! அமிர்தத்திடம் அடி வாங்கியிருக்கிறேன்! ஸ்டாலின் சொன்ன ஃபிளாஷ்பேக்
சென்னை: தனது அப்பா கருணாநிதியிடம் கூட தாம் அடிவாங்கியது கிடையாது என்றும் ஆனால் தனது மாமா அமிர்தத்திடம் அடி வாங்கியிருக்கிறேன் எனவும் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார். இதனை படிப்பவர்களுக்கு அமிர்தம் என்றால் யார் அவர் கருணாநிதிக்கு என்ன உறவு என்ற கேள்வி எழலாம்.

அமிர்தத்தை பொறுத்தவரை கருணாநிதியின் மூத்த சகோதரி பெரியநாயகி அம்மாள் மகன் ஆவார். ஒரு காலத்தில் தனது தாய்மாமா கருணாநிதிக்கு பக்கபலமாக நின்றவர். கருணாநிதிக்கு மொத்தம் 2 சகோதரிகள், மூத்த சகோதரி மகன் தான் அமிர்தம். இளைய சகோதரி சண்முகசுந்தரத்தம்பாள் மகன்கள் தான் முரசொலி மாறனும், முரசொலி செல்வமும்.
அமிர்தம் ஆரம்பக்காலங்களில் ஒரு சில படங்களை இயக்கியதால் அவரை இயக்குநர் என்ற அடைமொழியோடு அழைக்கும் வழக்கம் உண்டு. கலைஞர் தொலைக்காட்சியை கவனித்துக்கொள்ளும் அமிர்தம், முத்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பின் விருது வழங்கும் விழாவில் பேசும் போது தான் ஸ்டாலின் ஃபிளாஷ் பேக்கை பகிர்ந்தார். மேலும், அந்த நிகழ்வில் ஸ்டாலின் பேசியதாவது; ''அமிர்தம் அவர்களிடத்திலே எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல இடங்களிலே இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். அப்பாவிடத்திலே கூட அடி வாங்கியது கிடையாது. அவரிடத்திலே அடி வாங்கியிருக்கிறேன். அதை இன்றைக்கும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு என்னை கண்டிப்போடு வளர்த்தவர் இயக்குநர் அமிர்தம்.''
'' தொடர்ந்து அவர் ஆற்றிவரும் முத்தமிழ்த் தொண்டிலே என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதுண்டு.''












Click it and Unblock the Notifications