‘அந்த’ சென்டிமென்ட் மீண்டும் வேலை செய்ததா?.. ஸ்டாலின் தோல்வி விவாதம்!
சென்னை: ஒசூரில் பிரசாரம் செய்தால தோல்வி நிச்சயம் என்பது அரசியல் தலைவர்களின் நம்பிக்கை. அந்த அரசியல் சென்டிமென்ட்' காரணமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச்சு பரவியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் தோல்வி ஏற்படும் என்ற ஒரு அரசியல் நம்பிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதன் காரணமாக, பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் காலங்களில் ஓசூரில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்ப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த முறை நடைபெற்ற தேர்தலிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் ஓசூரை தவிர்த்து, கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதேபோல், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூட ஓசூரை தவிர்த்து, தளி, வேப்பனப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இதற்கிடையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலில் சூளகிரி அருகே காமன்தொட்டியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு ஓசூர் அந்திவாடியில் பிரச்சாரம் மேற்கொண்டது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஓசூரில் அவர் பிரச்சாரம் செய்ததே காரணமாக இருக்கலாம் என்ற கருத்து கட்சியினரிடையே பரவலாக பேசப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ஓசூரில் முன்னதாக எல்.கே. அத்வானி மற்றும் ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் பிரச்சாரம் செய்த பின்னர், அவர்கள் அரசியல் பயணம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் இந்த 'சென்டிமென்ட்'க்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.
2021 சட்டப்பேரவை தேர்தலிலும், ஸ்டாலின் ஓசூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டபோதும், கடைசி நேரத்தில் அதை மாற்றி சூளகிரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதே தேர்தலில் ஓசூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், ஓசூர் 'அரசியல் சென்டிமென்ட்' தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. இது ஒரு வதந்தி என கருதப்பட்டாலும், அதன் தாக்கம் அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications