மோடி என்ன வாஜ்பாயா? ஸ்டாலின் காட்டமான அறிக்கை
Recommended Video

சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வாஜ்பாய் கலாச்சாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம், கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சிகள் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.
இந்த நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டின் பலப்படுத்தவும் வலுப்படுத்தவும் எந்த வகையிலும் உதவாத, வெறுப்பு பேச்சுக்களை விதைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டே சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைத்து, அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலைசாய வைத்துள்ளவர் பிரதமர் மோடி.

வாஜ்பாய் பற்றி புகழ்ச்சி
மோடி, தன்னை "சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்" என்று தலைவர் கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் ஒப்பிட்டு கொள்வது வேடிக்கையாகவும் வினோதமாகவும் மட்டுமல்ல, வழக்கம் போல அவரது பிரச்சார யுக்தியாகவே இருக்கிறது.

குறைந்தபட்ச செயல் திட்டம்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே நோக்கத்திற்காக பாஜகவும் இடம்பெற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் திமுக கூட்டணி வைத்தது. நாட்டை பிளவுபடுத்தும் எந்த வேலைத்திட்டத்தை முன்வைக்காமல் ஒரு அஜெண்டாவை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்படுத்தியதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையான ஆதரவுடன் ஆட்சி செய்ததை நாடறியும்.

வாஜ்பாய் அல்ல
பிறகு மதவாத குரல்கள் எழுந்த உடன், கூட்டணியிலிருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் திராவிட முன்னேற்ற கழகம்தான் என்பதையும் நாடறியும். ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் அல்ல. அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமானதும் அல்ல.

சமூக நீதி
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றி பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பில் இருப்பவர் அல்ல. முன்பு எந்த பிரதமர் ஆட்சி செய்த போது இல்லாத அளவிற்கு தமிழக உரிமை பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த 4 ஆண்டுகாலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் கூட்டணி அமைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விரும்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications