என் பரம்பரை வரும் என கருணாநிதி அன்றே சொன்னார்.. யார் வாரிசு? ஸ்டாலின் பகிர்ந்த மலரும் நினைவுகள்
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பரம்பரையாக தாங்கல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் யார் வாரிசு என்றும் கூறியுள்ளார்.
பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, "கடந்த 2012-ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்தது தலைவர் கலைஞர் அவர்களோடு, இனமானப் பேராசிரியர் அவர்களும், நம்முடைய ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினேன். நம்முடைய நன்னன் அவர்களும் அதில் பங்கெடுத்து சிறப்பான உரையை ஆற்றினார்கள். கலைஞர் அவர்கள் எப்படி கடைசி காலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்கார்ந்து பேசுவாரோ, அதேபோல, நன்னன் அவர்களும் உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு என்பது திராவிட இயக்க வகுப்பு நடத்துவதுபோல இருக்கும்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தோம்? இப்போது நிலைமை எப்படி மாறி இருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார் நன்னன் அவர்கள் அந்த 100 ஆண்டு வரலாற்றை 10 நிமிடத்தில் அனைவருடைய மனக்கண் முன்னால் நிறுத்தி பேசக்கூடிய ஆற்றல் அவருக்குதான் உண்டு. இதுதான் அவரது பாணி.
அந்த விழாவில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள். "13 வயதில் தமிழ்க் கொடி ஏந்திப் போராடியவன் இந்தக் கருணாநிதி, இன்றைக்கும், அந்தக் கருணாநிதியினுடைய பரம்பரை, கருணாநிதியுனுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கிற காரணத்தால் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க வந்து கொண்டே இருப்பார்கள்" என்று பேசினார்.
அத்தகைய கலைஞரின் பரம்பரையினராக, வழித்தோன்றல்களாக நாம் இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். கலைஞரின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள் தான்.
இந்த வழித் தோன்றல்கள்தான் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பதைப் போல விடுதலை இயக்கத்துக்கும் வழித்தோன்றல்கள் எப்போதும் இருப்பார்கள். தனக்கென ஒரு எழுத்து நடையை, வைத்திருந்தார்கள். பேச்சு நடையை நன்னன் அவர்கள்.
பிழையின்றி எப்படி எழுத வேண்டும். பிழையின்றி எப்படி பேச வேண்டும் என்பதை கற்பிக்கும் மிகப் பெரிய ஆசானாக அவர் விளங்கினார். சென்னை தொலைக்காட்சியில் அவரது தமிழ் வகுப்புகள் 17 ஆண்டுகள் வந்துள்ளது எந்த ஒரு தமிழாசிரியரும், தமிழ்ப் பேராசிரியரும் அடைய முடியாத பெருமை இது.
தனக்கு முன்னால் மாணவர்கள் உட்கார்ந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு அவர் எடுத்த வகுப்பு உண்மையில் ஆச்சரியமானது, அசத்தலானது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தனது முப்பெரும் விழாவில் நன்னன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கியது. பெரியாரைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாள் என வாழ்ந்த தமிழ்ப் பெரியார் தான் நம்முடைய நன்னன் அவர்கள்.

இந்தியாவையே கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வர நாம் முன்னெடுப்புகளைச் செய்து கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் இருந்ததைப் போல மற்ற மாநிலங்களுக்கு இல்லை.
எங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் வந்திருக்கிறது. சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக அமைந்திருக்கிறது. அது வேறு நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன்.
தொடர்ந்து அவரே இருக்கவேண்டும். இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்கமுடியும். நம்முடைய பிரச்சாரத்தை நாம் சிறப்பாக செய்யமுடியும். தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் பேசி வருவதே நமது கொள்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுத்து வருகிறது." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications