வடக்கே இருந்து வந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை..ஸ்டாலின் அடித்த 2 சிக்சர்கள்..உதயநிதி உற்சாக பேச்சு
சென்னை: யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அந்த விளையாட்டில் வெல்ல முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.யாரிடம் எப்போது மோத வேண்டும் என்பதை தந்தை பெரியார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இதனை தெரிவித்தார். உதயநிதி அமைச்சரான பின்னர் முதன்முறையாக தனது துறை மீதான மானியக்கோரிக்கைக்கு இன்று பதில் அளித்து பேசினார்.

மாமன்றத்தின் நியாயமான ரெப்ரியாக பேரவை தலைவர் செயல்படுவதாகவும், யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைத்து அதற்கான முயற்சி செய்வதாகவும், ஆனால் வடக்கில் இருந்து வந்த யாரும் இங்கு வென்றது இல்லை எனவும் கூறினார். இதற்கு காரணம் திமுக என்ற வலுவான அணியும் ஸ்டாலின் என்ற கேப்டன் இருப்பதும் தான்.
எந்த நேரத்தில் யாருடன் மோத வேண்டும் என பெரியார் சொல்லிகொடுத்து இருப்பதாகவும், ஒற்றுமையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா சொல்லிக் கொடுத்துள்ளதாவும், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக்கூடாது என்று கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
அதோடு, எப்போதெல்லாம் டிபன்ஸ் ஆட வேண்டும், எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார் என்றும் உதயநிதி கூறினார்.
ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்சரை அடித்த முதல்வர் ஸ்டாலின், டெல்டா நிலக்கரி சுரங்கம் ரத்து என இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்சாகமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மினி ஸ்டேடியம் உள்ள 61 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராகவும் மாற்றிய முதலமைச்சருக்கு நன்றி. ரூ.114 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் 76 பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
அமைச்சரான பின்னர் பேசிய முதல் பதில் உரையை அதிக ஆர்வத்துடனே கேட்டார் அவரது தந்தையும் முதல்வரும் கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின். வரும் 20ஆம் தேதி காவல் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, தீயணைப்புத்துறை 21ஆம் தேதி காவல், தீயணைப்புத்துறை மீதான விவாத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications