காலத்தின் கட்டாயம்.. புதிய ஆட்சி அமைய உடனே ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம். எனவே உடனடியாக புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.108 இடங்களை தவெக வென்றது. தனி மெஜாரிட்டி கிடைக்காத போதிலும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணை காட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்று ஆளுநர் ஆர்லேகர் கூறினார். ஆளுநரின் இந்த செயல் ஜனநாயக விரோதமானது என்று அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட விஜய் பலத்த மவுனமே காத்து வந்தார்.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பின. இந்த சூழலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஆளுநரின் செயலை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications