பெரும்பான்மையை நிரூபிக்கணும்னு 'இந்த நாளில்' தீர்ப்பு கொடுத்ததுதான் சிறப்பு.. ஸ்டாலின் வரவேற்பு
Recommended Video
சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சாசன நாளில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சனிக்கிழமை ஆட்சி அமைத்தார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தங்கள் கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு கிடையாது என்று அறிவித்ததுடன், அஜித் பவாரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார். மேலும் அவருடன் எந்த எம்எல்ஏவும் செல்லக்கூடாது என்றும் மீறினால் கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாகவும், எனவே இப்போது ஆட்சியமைத்துள்ள பாஜகவை உடனே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தன.
நம்பிக்கை வாக்கெடுப்பு சரி வருமா? இல்லை பதவி விலகலாமா? நாளை காலையே முடிவு செய்யும் பாஜக!
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளன.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுகவும் வரவேற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில் ( அரசியல் அமைப்பு சாசன நாளில்) சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.