ஆளுநருக்கு எதிராக தர்ணா.. நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமிக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: புதுவை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று கிரண்பேடி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பொதுமக்களுக்கு தேவை விழிப்புணர்வே தவிர, அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த கருத்தை ஆளுநர் மறுக்க.. அதனை நாராயணசாமி எதிர்க்க.. இன்று புதுச்சேரி வரலாற்றில் இல்லாத ஒரு விஷயமாக, ஆளுநருக்கு எதிரான தர்ணா போராட்டத்தை முதல்வர் கையில் எடுத்து உள்ளார். 2-வது நாளாகவும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
முகுல் வாஸ்னிக்
முதல்வரின் இந்த போராட்டத்திற்கு புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோரும் நாராயணசாமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தும் நாராயணசாமிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வரும் நாராயணசாமியுடன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
வாழ்த்துக்கள்
நடந்து வரும் போராட்டத்தின் காரணம் குறித்தும், போராட்டத்தின் தன்மை குறித்தும் ஸ்டாலின் முதல்வரிடம் கேட்டறிந்தார். பிறகு இப்போராட்டம் வெற்றி பெறுவதற்கான தனது வாழ்த்தையும் நாராயணசாமியிடம் கூறியுள்ளார்.