களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர்! விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன்! -ஸ்டாலின்
சென்னை: களம் அழைக்கிறது, வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர், விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன் எனக் கூறி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;
முதலமைச்சர் என்ற பொறுப்பினை உடன்பிறப்புகளாகிய நீங்களும், தமிழ்நாட்டுப் பொதுமக்களும் என் தோளில் சுமத்திய நிலையில், அந்தப் பொறுப்புக்குரியவனாகக் கடந்த இரண்டாண்டுகளாக ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கழக உடன்பிறப்புகளாம் உங்கள் திருமுகம் காண்பதற்குக்கூட நேரமின்றி, கடிதத்தின் வாயிலாகவும், காணொலி வாயிலாகவும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

கழக உடன்பிறப்புகளின் மனக் குரலை நானறிவேன். அது குரலாகவும், சில நேரங்களில் உரிமையுடனான குமுறலாகவும் வெளிப்படுவதையும் உணர்கிறேன். உண்மையான கொள்கை உணர்வுடன், முதற்கட்ட சந்திப்பிற்கான வாய்ப்பு தீரர் கோட்டமாம் திருச்சியிலே அமையவிருக்கிறது.
நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழ்நிலை நிலவிவரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு ஜனநாயகத்தை மீட்பதில் கழகம் முனைப்போடு களம் காண்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கழகப் பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்து, பூத் கமிட்டிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக அமைக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் கழக உடன்பிறப்புகள் முனைப்புடன் செயலாற்றி நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் - ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி - கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தலைமைக் கழகத்திலிருந்து அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் விவரங்களும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் தயாராக உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே, எதற்காக இப்போதே இந்தக் கூட்டம் என்று உடன்பிறப்புகளில் சிலர் நினைக்கலாம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கழகத்திற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் போன்ற முக்கியமான பணிகளும் உள்ளன. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென 'உயிர்த்தெழுந்து' வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். 'இந்தியா'வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.
டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே!












Click it and Unblock the Notifications