போலீஸ்- நடத்துனர் 'கட்டிப்பிடி வைத்தியம்'.. நன்மையில் முடிந்த கலகம்.. விரைவில் மேஜர் குட்நியூஸ்
சென்னை: போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் இடையேயான மோதலை 'கட்டிப்பிடி வைத்தியம்' மூலம் முடிவுக்கு கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் காவலர்களுக்கு இலவச பயண அட்டை திட்டத்தை ஜூன் 4க்கு பிறகு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க போகிறதாம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை காவல்துறை என்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் துறையாகும். தமிழ்நாட்டின் அத்தனை துறைகளுக்கும் முதல்வர் தான் பொறுப்பு என்றாலும், அந்தந்த அமைச்சர்கள் பரிந்துரை செய்வார்கள்.அதன்படியே முதல்வர் முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பார். ஆனால் காவல்துறை அதாவது உள்துறையை பொறுத்தவரை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் துறையாகும். இந்த துறையில் எந்த முடிவு என்றாலும் அதில் நேடியாக முதல்வரே முடிவு செய்ய வேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் உள்ள நடைமுறை.

தமிழக காவல்துறையை பொறுத்தவரை உயர்ந்த பொறுப்பு என்றால் சட்டம் ஒழுங்கு டிஜிபி தான். இவரது தலைமையின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள். காவல்துறையை பொறுத்தவரை மற்ற பணிகளை போல் மிகப்பெரிய ஊதியம் எல்லாம் கிடையாது. இவர்களுக்கு பணி நேரமும் மிக அதிகம். வாரவிடுறை எடுப்பது கூட எளிதானது அல்ல. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள் காவலர்கள். குழந்தைகளுடன், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்பது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. மறுபக்கம் குற்றவாளிகளுடைய நடவடிக்கைகள் காரணமாக கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் நிலை காவலர்களுக்கு ஏற்படும்.. ஊதியத்தை தாண்டி காவலர்களுக்கு பெரிய அளவில் எந்த சலுகையும் இல்லை.
பொதுவாக காவலர்கள் பணியிடங்களுக்கு செல்ல டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும். வாரண்டுடன் குற்றவாளிகளை பிடித்து செல்லும் போது, அல்லது பிடிக்க செல்லும் போதுதான் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2021ல் காவல் துறை மானிய கோரிக்கையின் போது, அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அடடைகளை காண்பித்து இலவச பயணம் மேற்கொள்ளலாம், இதற்காக நவீன அட்டை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பரில் அன்றைய உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதினார். அதில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை குறிப்பிட்டு, காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை, அரசு பஸ்களில் தங்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கு கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, 'ஸ்மார்ட் கார்டு' உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கான அரசாணையும் வெளியிடப்படவில்லை என்றும் நிதி ஒதுக்கீடும் அப்போது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்வரின் அறிவிப்பும் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்த சூழலில் கடந்த மே 21ம் தேதி, நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பஸ்சில், காவலர் ஆறுமுக பாண்டியன் சீருடையுடன் பயணித்தார். அப்போது அரசு பேருந்து நடத்துனர் சகாயராஜ், , காவலர் ஆறுமுக பாண்டியனிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அப்போது அவர் மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ வெளியான நிலையில், குறிப்பிட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை பரிந்துரை செய்தது. தொடர்ந்து வாரண்ட் இருந்தால் மட்டுமே அரசு பேருந்தில் இலவசமாக காவலர்கள் பயணிக்க முடியும் என்றும் மற்ற சமயங்களில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்தது.
இதையடுத்து காவல்துறையினர் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதித்தனர். ஏராளமான பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்து இடையிலான வெளிப்டையாக மோதல் போல் மாறியதாக பார்ப்போருக்கு தோன்றியது. எதிர்க்கட்சிகள் எல்லாமே இந்த விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரமுதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.
இதுஒருபுறம் எனில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், "தமிழக காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு, கடந்த 13.9.2021 அன்று முதல்வரால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இலவச பயணம் மேற்கொள்ள நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழலில், அடிக்கடி இலவச பயணம் தொடர்பாக காவலர்களுக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்யும் சாதாரண பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.காவலர்கள் தங்கள் பணி நிமித்தமாக அடிக்கடி அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்து வரும் நிலையில், அதிக தூர பயணங்களுக்கு பஸ் வாரண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உள்ளூர் பயணம் மூலமாகத்தான், தினசரி பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
உள்ளூர் பயணத்தில் பஸ் வாரண்டுகளை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் காவலர்களுக்கான இலவச பஸ் பயணத்தை அனுமதிப்பது குறித்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். பணி நிமித்தமாக பஸ்சில் பயணம் செய்த நெல்லை மாவட்ட காவலர் ஆறுமுகபாண்டியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அண்மையில் உள்துறை செயலர் அமுதா, போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி சந்தித்து பேசினார்கள். அதன்பின், உடனடியாக பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசு உத்தரவிட்டது. இதன்படி மோதலுக்கு காரணமான ஆறுமுகபாண்டி, சகாயராஜ் கட்டிப்பிடி வைத்தியம் நடந்தது. ஒருவருக்கு ஒருவர் இனிப்பு ஊட்டிவிட்டு கட்டிப்பிடித்து பரஸ்பரம் சமாதானமாக பேசிக்கொண்டார்கள். இருவரும் சமாதானமான வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் படி, காவல் துறையினர் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள், பஸ்களில் இலவசமாக பயணிக்க தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் போக்குவரத்து பணியாளர்கள் - காவல் துறையினர் மோதலுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், நிரந்தர தீர்வு காணப்பட உள்ளாம். ஜூன் 4க்கு பிறகு காவல்துறைக்கு பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்ட் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications