சுனில் ராஜினாமா...? கொண்டாடும் திமுக மாவட்டச் செயலாளர்கள்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆலோசகராகவும், அரசியல் திட்டமிடல் குழுவை வழிநடத்துபவராகவும் இருந்த சுனில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முறைப்படி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது பதவி விலகல் குறித்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றாராம்.
இதனிடையே சுனில் பதவி விலகல் தொடர்பாக நேற்றிரவு முதல் திமுக வாட்ஸ் அப் குரூப்களில் செய்தி பரவ, அதை பார்த்துவிட்டு மாவட்டச் செயலாளர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்!
ஓ.எம்.ஜி.குரூப்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக அரசியல் திட்டமிடல் குழுவை உருவாக்கி அதை வழி நடத்தி வந்தவர் தான் இந்த சுனில். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோர் டீமில் பாஜகவுக்கு பணியாற்றிய அவர், 2015-ல் மு.க.ஸ்டாலினுடன் இணைந்தார். ஓ.எம்.ஜி. எனப்படும் ஒன் மேன் குரூப் அமைப்பைத் தொடங்கி அதை வழிநடத்தினார்.
நமக்கு நாமே
மு.க.ஸ்டாலினுக்காக அரசியல் திட்டமிடல் பணிகளை செய்து வந்த அவர், 2016 சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே என்ற முழக்கத்துடன் ஸ்டாலினை தமிழகம் முழுவதும் சுற்றி வர வைத்தார். மேலும், ஸ்டாலினின் இமேஜை உயர்த்தும் வகையில் அவர் பல காரியங்களை கணக்கச்சிதமாக செய்து வந்தார்.
காரணம் என்ன?
இதனிடையே சுனில் நேற்று ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகின. இது தொடர்பாக விசாரித்த போது, பஞ்சமி நில விவகாரத்தில் தலைவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதே சுனில் தான். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவரை அசுரன் படம் பாருங்க எனச் சொல்லி, பஞ்சமி நிலம் பற்றி ட்வீட் போட்டு தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தினார். அதிலிருந்தே தலைமைக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது அவர் ராஜினாமா செய்துவிட்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்கிறார் மூத்த நிர்வாகி.
கொண்டாட்டம்
திமுக நிர்வாகிகள் வாட்ஸ் அப் குழுக்களில் சுனில் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சுனில் ராஜினாமா செய்துவிட்டார் என தகவல் பரவத்தொடங்கியதும் அதை வெடி வெடித்து கொண்டாடத குறையாக மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.