ஐயோ எனக்கு தெரியாதே.. தலையில் அடித்துக்கொண்ட வானதி.. மறித்து கேள்வி கேட்ட விஜயதரணி.. ஒரே சிரிப்பு
சென்னை: சட்டப்பேரவைக்கு கருப்பு உடையில் வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதியை காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக இந்த போராட்டம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிந்தபடி அவைக்கு வந்தனர்.
இரவிலும் சட்டசபையில் போராட்டம் செய்வோம் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அறிவித்து உள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் இருளான காலத்தில் நாம் இருக்கிறோம். ராகுலை தகுதி நீக்கம் செய்தது தவறு. அதை தேசிய அளவில் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

வானதி சீனிவாசன்
இந்த நிலையில் சட்டசபையில் திடீரென வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருப்பு உடை அணிந்து வந்தது பெரிய சர்ச்சையானது. கருப்பு புடவையில் அவர் வந்து இருந்தார். வானதி சீனிவாசனை பார்த்ததும் பெண் செய்தியாளர் ஒருவர்.. என்ன மேடம் நீங்களும் கருப்பு உடையில் வந்து இருக்கீங்க? நீங்களும் காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவா என்று கேட்டார் . இதை கேட்டதும் ஷாக்கான வானதி சீனிவாசன்.. என்ன சொல்றீங்க.. இன்னைக்கா போராட்டம். எனக்கு தெரியாதே. தெரியாமல் வந்துவிட்டேன். என்னங்க இப்படி சொல்றீங்க என்று கேட்டார். சிரித்தபடியே வானதி சீனிவாசன் சமாளிக்கும் விதமாக பேசினார்.

குறுக்கீடு
சட்டென குறுக்கிட்ட இன்னொரு ஆங்கில செய்தியாளர் இதே விஷயத்தை ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கும் ஆங்கிலத்தில் பதில் சொன்ன வானதி சீனிவாசன்.. ஐயோ தெரியாமல் வந்துவிட்டேன். தெரிந்து இருந்தால் வந்து இருக்க மாட்டேன். வழியை விடுங்கள். நான் உள்ளே செல்கிறேன் என்று கூறினார். அவர் சிரித்திக்கொண்டு பதில் சொன்னாலும் அங்கே இருக்க மனமின்றி வேகமாக உள்ளே செல்ல முயன்றார். வேகமாக அங்கே இருக்கும் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளே செல்ல முயன்றார்.

வானதி சீனிவாசன் கருப்பு
தலையில் அடித்துக்கொண்டு சிரித்தபடியே வானதி சீனிவாசன் உள்ளே செல்ல முயன்றார். அப்போது வானதியை வழி மறித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.. என்னங்க மேடம் நீங்களும் கருப்பு புடவையா.. சூப்பர் என்று கூறினார். இதை கேட்டதும் வெடித்து சிரித்த வானதி சீனிவாசன்.. ஐயோ எனக்கு தெரியலையே.. இப்படி வந்துட்டேன் என்று சிரித்தபடி கூறினார். அவரின் பதிலால் அவைக்கு வெளியே சிரிப்பலைகள் எழுந்தன.

போராட்டம்
ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications