இடைத்தேர்தல் தோல்வி! ''பாசிச பாஜகவை முதுகில் சுமப்பதால் அதிமுகவுக்கு கிடைத்த தண்டனை''! -ஜவாஹிருல்லா
பாஜகவை முதுகில் சுமப்பதால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை வழங்கியதாக ஜவாஹிருல்லா விமர்சனம்.
சென்னை: பாஜகவை முதுகில் சுமப்பதால் அதிமுகவுக்கு கிடைத்த தண்டனை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
வலுவான கூட்டணியை அமைத்து இம்மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த ஸ்டாலினுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாக அமைந்துள்ளது. அஇஅதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் பொய்ப் பரப்புரைகள் மக்கள் மத்தியில்எடுபடவில்லை.
இந்த வெற்றி என்பது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி. பாசிச பாஜகவை முதுகில் சுமக்கும் அஇஅதிமுகவிற்கு ஈரோடு மக்கள் அளித்துள்ள தண்டனை. இந்த வெற்றி என்பது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும்வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
வலுவான கூட்டணியை அமைத்து இம்மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாபெரும் வெற்றியை அளித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கும் இந்த வெற்றிக்காகக் கடுமையாக களப்பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிக்குக் கடுமையாக உழைத்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் கூடுதல் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.''












Click it and Unblock the Notifications