ராமர், லட்சுமணனாக மோடி, அமித்ஷா.. வருத்தம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா! அப்படி என்ன பேனர் அது?
சென்னை: மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்து உள்ளார்.
மணிப்பூரில் 3 மாதங்களாக தொடர்ந்து வரும் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக சாலையில் இழுத்து செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணிப்பூர் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா ராமர், லட்சுமணன் போல் இருப்பதை போன்ற கார்ட்டூன் இடம்பெற்றது. இது இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, ஹிந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களை கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?
வத்தலகுண்டு நகரில் ஹிந்து கடவுளை அவதூறு செய்து பதாகைகளை வைத்த மனித நேய மக்கள் கட்சியின் இழி செயலுக்கு அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது.
இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications