முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக ஏஆர் ரஹ்மான் மீது மத வெறுப்பு! ஜவாஹிருல்லா காட்டம்
சென்னை: இந்திய இசைக்கு உலக அரங்கில் பெருமை சேர்க்கும் வகையில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற மகத்தான இசையமைப்பாளரை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மத ரீதியாகக் கடுமையான விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்து வருவதாக மமக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி ஏசிடிசி் என்ற குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சரியான முறையில் திட்டமிடாமையால் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். நிகழ்ந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் நுழைவுச் சீட்டு பெற்று நிகழ்ச்சியைக் காண இயலாதவர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்க முன்வந்துள்ளனர்.
உலக அரங்கில் இந்திய இசைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற மகத்தான இசையமைப்பாளரை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மத ரீதியாகக் கடுமையான விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஏ ஆர் ரகுமான் அவர்களை மட்டும் குறி வைத்துக் குற்றப்படுத்தும் போக்கை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் வெறுப்பு அரசியலுக்கு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் கலைஞர்களும் விதிவிலக்கல்ல என்பதை இது எடுத்துக் காட்டியுள்ளது. உலக அரங்கில் அவருக்கு இருக்கும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கோடும் காழ்ப்புணர்வோடும் பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருவது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய நாட்டின் பெருமையையும் இந்திய இசையையும் உலக அளவில் கொண்டு சேர்த்த ஒரு உன்னத கலைஞனை மதத்தின் அடிப்படையில் சுருக்கி நச்சு கருத்துக்களைப் பரப்பும் கீழ்த்தரமான அரசியலை பாஜக உள்ளிட்ட சங்கி வகையறாக்கள் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.












Click it and Unblock the Notifications