விவசாயிகளை கொடூர முறையில் ஒடுக்க நினைப்பதா... உ.பி. அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!
சென்னை: அறவழியில் போராடும் விவசாயிகளைக் கொடூர முறையில் ஒடுக்க நினைக்கும் மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உ.பி. அரசு
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோடி அதன் காரணமாக நான்கு விவசாயிகள் உயிர் இழந்ததும் பலர் காயமடைந்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகம் எங்கே?
திட்டமிட்டு விவசாயிகள் மீது மோடி உயிரிழப்பிற்குக் காரணமான வாகனத்தை ஒட்டியவர் ஒன்றிய அமைச்சரின் மகன் என்று கூறப்படுகின்றது.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டுள்ளதும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் உ.பி. வருவதைத் தடைச் செய்திருப்பதும் பாஜக ஆளும் உ.பி.யில் ஜனநாயக நெறிமுறைகள் முற்றிலும் சீர்கெட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

மனிதநேயம்
மனிதநேயமற்ற வகையில் விவசாயிகள் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றேன். வன்முறையைத் தூண்டிய வழக்கும் அவர் மீதும் தொடுக்க வேண்டும். அஜய் சிங்கின் மகனும் அவரை சேர்ந்தவர்கள் மீதும் கொலை வழக்கு (302 இபிகோ) பதிவு செய்து அவர்களைக் கைது செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கண்டனம்
சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைச் செவி சாய்க்காமல் அறவழியில் போராடும் விவசாயிகளைக் கொடூர முறையில் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications