வாருங்கள் பணியாற்றுவோம்... நடிகர் ரஜினிக்கு... மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அழைப்பு
சென்னை: வாருங்கள் பணியாற்றுவோம். என நடிகர் ரஜினிக்கு. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேச தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், என் மொழி மற்றும் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்று அதிரடியாக தனது பேச்சை தொடங்கினார். மேலும், எம்.ஜி. ஆரை நான் முதல்வராகப் பார்க்கவில்லை, அண்ணனாகவே பார்த்தேன் என்றும் அவர் பேசினார்.
வாருங்கள் பணியாற்றுவோம்
தொடர்ந்து பேசிய அவர், வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார். 'தலைவர்' என அழைக்கப்படும் நபர் தொடர்ந்து அரசியலை கவனித்து வருகிறார். எனவே, வாய்ப்பு இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று அழைக்கவில்லை. வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றே அழைக்கிறேன் என்று அவர் பேசினார். முன்னதாக நேற்று போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் ரஜினி காந்தை கமல் நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஆள்பவர்களைப் பார்க்க முடியவில்லை
முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது விரும்பிய நேரத்தில் அவரைப் பார்க்க முடிந்ததாக தெரிவித்த அவர், தற்போது ஆள்பவர்களைப் பார்க்க முடிவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், தான் கோபத்தால் அரசியலுக்கு வந்தவன் என்று கூறுவது தவறு என்ற அவர், மக்கள் அன்பு மற்றும் அழுகையிலேயே அரசியலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்,
தமிழனுக்கு மரியாதை கிடைப்பதில்லை
பிரதமர் மோடிக்கு தான் 7 முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஒரு முறை கூட அவர் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், பசு மாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட இந்த நாட்டில் தமிழனுக்குக் கிடைப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
கதவு திறந்தே இருக்கும்
மேலும், நல்லவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் கதவு திறந்தே இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு விரைவில் வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். சீமான் மற்றும் சரத்குமார் தங்கள் அணிக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.