'தோல்விக்கு பிறகும், கமல் மாறவில்லை.. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை'.. மகேந்திரன் சாடல்
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள மகேந்திரன், கமல்ஹாசன் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்களான பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு என அனைவரும் தோல்வியடைந்தனர்.
குறிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

முக்கிய நிர்வாகிகள் விலகல்
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர். அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாக , கமலுக்கு அடுத்து கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்தே முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

மகேந்திரன் கடிதம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு நிறைந்த மக்கள் நீதி மய்யக் குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.

காரணம் என்ன
இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். நான் ஏன் இப்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பதற்கான விரிவான காரணத்தை உங்கள் அனைவரிடமும் இத்துடன் ஒரு விளக்கக் கடிதத்தை இணைத்துள்ளேன்.

கமல் மாறுவார் என்று நம்பிக்கை இல்லை
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்திருக்கின்றேன். கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், கமல்ஹாசன் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத் தெரிந்த கமல்ஹாசன், கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்குத் தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.

கமலுக்கு நன்றிகள்
கமல்ஹாசனால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்காசகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களைச் சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அரசியல் எனும் விதையை, எனக்குள் விதைத்த கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தி சொன்னதுபோல "நீங்கள் விரும்பும் மாற்றமாக இருங்கள்' என்பதற்கேற்ப சிறப்பாகவும், அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விடை பெறுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications