தென் தமிழக மக்களே.. ரெடியா.. 2 நாட்களுக்கு அடிச்சு ஊத்த போகுது மழை
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அடுத்த இரு நாளைக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா வந்து போயாச்சு... பாதிப்புதான் நிறைய தந்ததே தவிர மழையை அவ்வளவா தமிழகத்துக்கு தரவில்லை. அடிக்கடி லேசான மழைகள் பெய்து மண்ணை ஈரமாக்கியதே தவிர, ஏரி, குளங்களை நிரப்பவில்லை.
இதற்கு பிறகு புதுச்சேரி வங்கக்கடலில் பெய்ட்டி புயல் உருவானது. இந்த புயலிலாவது வட தமிழகத்துக்கு நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரூட் மாறிய பெய்ட்டி
ஆனால் ரூட் மாறி ஆந்திராவுக்கு போய்விட்டது பெய்ட்டி. இதனால் இந்த புயலால் சென்னையில் குளிர்காற்று வீசுகிறதே தவிர மழை தரவில்லை. தற்போது இரண்டு புயல்கள் வந்து போயும் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அதனால் எப்படியும் இன்னும் 3 மாசத்துக்கு தண்ணி பஞ்சம், வறட்சி ஏற்படும் என்று இப்போதே கிலியை ஏற்படுத்துகிறார்கள்.

மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில், இன்னொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது குமரிக் கடலில் உருவாகி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம்
குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த மழை அநேக இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகள் நிரம்புமா?
ஆனால் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் சொல்லப்படவில்லை. தென் தமிழகத்தில் பலத்த மழை என்பதால் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், நீர்நிலைகளை நிரப்பும் அளவுக்கு இந்த முறையும் மழை இல்லாமல் போய்விடுமா என்பதும் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications