திடீரென மாறிய வானிலை.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. பல இடங்களில் கொட்டி தீர்த்தது
சென்னை: கடந்த சில நாட்களாக வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னையின் அண்ணா நகர், கோயம்பேடு, வில்லிவாக்கம் தொடங்கி அயனாவரம், பெரம்பூர், ராயபுரம் என வடசென்னை முதல் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர் என பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
ஏற்கெனவே சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

அறிவிப்பு
மழை குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருந்த குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.08.2022 மற்றும் 22.08.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருந்தது. மேலும், 23ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை
அதேபோல 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25ம் தேதியை பொறுத்த அளவில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது நகரின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
திடீர் மழை காரணமாக போக்குவரத்தில் ஆங்காங்காங்கே நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த நெரிசல் நீண்ட நேரம் நீடிக்கவில்லையென்றாலும் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் எது பள்ளம் எது சாலை என வாகன ஓட்டிகள் கடும் குழப்பத்துடன் சாலைகளில் பயணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications