மோடி&அம்பேத்கர்.. இளையராஜா வாழ்த்திய புத்தகம் தமிழில் ரிலீஸ்! பிரதமரை புகழ்ந்து தள்ளிய ஆளுநர் ரவி
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தன்னுடைய குடும்பமாக பார்க்கிறார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தன்னுடைய குடும்பமாக பார்க்கிறார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்களை இன்று உலகமே உற்று நோக்குவதாக தெரிவித்த அவர், தன்னுடைய ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கு அவர் உணவு வழங்க வேண்டும் என்று செயல்பட்டு வருவதாக கூறினார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரில் இருவரையும் ஒப்பிட்டு ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு அவர் எழுதி இருந்தார்.

மோடியை பாராட்டிய இளையராஜா
"அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அம்பேத்கரும், மோடியும் ஏழ்மை மற்றும் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர்.

அம்பேத்கருடன் ஒப்பீடு
இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. " என குறிப்பிட்டு இருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஆங்கில புத்தகம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி இளையராஜா முன்னுரை எழுதிய 'Ambedkar and Modi - Reformer's ideas, Performer's implementation' என்ற புத்தகத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் மொழிபெயர்ப்பு
இந்த நிலையில் இந்த புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் 20 கனவுகளை விளக்கும் மோடி @ 20 புத்தகமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த 2 தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்றது.

ஆளுநர் வெளியிட்ட புத்தகம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், பேராசிரியர் காமகோடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எல்.முருகன் முன்னிலையில் 2 புத்தகங்களையும் வெளியிட்டார்.

இந்தியாவே மோடியின் குடும்பம்
அதை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் உலகின் உயர்ந்த மொழியாகும். மோடி @ 20 மற்றும் அம்பேத்கர் & மோடி ஆகிய 2 புத்தகங்களையும் தமிழில் வெளியிடுவது பெருமைக்குரிய விஷயம். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய குடும்பமாக நாட்டை பார்க்கிறார். தன்னுடைய ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கு அவர் உணவு வழங்க செயல்பட்டு வருகிறார். மோடியின் பேச்சுக்களை இன்று உலகமே உற்று நோக்குகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications