விஜய் ஆட்சிக்கு வரும் முன்பே, மத்திய அரசு வேலையை காட்டியது.. PM SHRI திட்டத்தில் கையெழுத்திட நெருக்கடி!
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) திட்டத்துக்கு இதுவரை MoU கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் விரைவில் கடிதம் எழுதி MoU கையெழுத்திட வலியுறுத்த திட்டமிட்டு உள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வென்றுள்ளது. தமிழ்நாட்டில் திராவிடம் அல்லாத தவெக கட்சி ஆட்சிக்கு வர உள்ளது. இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் இரு மாநிலங்களையும் PM SHRI திட்டத்தில் கையெழுத்திட நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது.

PM SHRI திட்டம்
PM SHRI திட்டம் என்பது மோடி தலைமையிலான அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ முழுமையாக செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாநிலங்கள் NEP கொள்கையின் அனைத்து விதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாநில அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு என்ன காரணங்கள்
தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை எதிர்க்க முக்கிய காரணம் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் உள்ள மூன்று மொழித் திட்டம் தான். இந்த மூன்று மொழித் திட்டம் தமிழ்நாட்டில் ஹிந்தியை பின்கதவு வழியாக கொண்டு வரும் முயற்சி என்று தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கடைப்பிடித்து வருகிறது. மேலும், PM SHRI திட்டம் NEP-ஐ முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்திய அரசியல் சாசனத்தில் கல்வி Concurrent List உள்ளது என்பதால், இதற்கு மாநில அரசு தனிப்பட்ட முறையில் கொள்கைகளை வகுக்க முடியும். ஆனால் மத்திய அரசு நிதி உதவியை ஆயுதமாகப் பயன்படுத்தி மாநிலங்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடர்ந்து கூறி வருகிறது. இந்தக் கொள்கை மாநிலத்தின் சொந்த கல்வி மாதிரியை பாதிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு கூறி வகுகிறது.
தமிழ்நாடு அரசு இதுவரையில் MoU-ஐ முழுமையாக கையெழுத்திடாததால், சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய சுமார் 2,151 கோடி நிதி மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. SSA மற்றும் PM SHRI திட்டங்கள் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், முடக்கி வைக்கப்பட்டு உள்ள நிதி அளிக்கப்படாது என மத்திய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
2024 ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு NEP செயல்பாட்டு விதியை நீக்கிய மாற்றியமைக்கப்பட்ட MoU-ஐ மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் அந்த மாற்றத்தை மத்திய கல்வி அமைச்சகம் நிராகரித்தது. இந்த நிலையில், 2025 மே மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. PM SHRI மற்றும் NEP-உடன் தொடர்புடைய கல்வி நிதி வழங்காததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கு மட்டும் கடிதம்
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே இந்த MoU-ஐ இதுவரை கையெழுத்திடாத நிலையில், மத்திய அமைச்சகம் இந்த இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் விரைவில் கடிதம் எழுதி உடனடியாக MoU கையெழுத்திடுமாறு வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்கும் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எப்படி கையாளப்போகிறார்? விஜய் தலைமையிலான அரசின் முடிவு தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications