மோடி வெற்றி பெற்றிருக்கிறார்.. ஆனால் இந்தியா தோற்றுவிட்டது.. தமிழக காங்கிரஸ்!
சென்னை: மக்களவை தேர்தல் முடிவின்படி மோடி வெற்றி பெற்று விட்டார் ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான மக்களவைத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் பாஜக காங்கிரஸை விரட்டியடித்துள்ளது.
பாஜகவின் வெற்றி எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் மோசமாக உள்ளது.
தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை!
காங்கிரஸ் தோல்வி
காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரான ராகுல்காந்தி தோல்வியடைந்துள்ளார். மேலும் பல தொகுதிகளிலும் காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை சந்திதுள்ளனர்.
இந்தியா தோற்றுவிட்டது
கடந்த தேர்தலை காட்டிலும் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடியின் வெற்றி குறித்து பேசிய அவர், மோடி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என்றார்.
மனதிற்கு வருத்தம்
மேலும் தவறான கொள்கைக்கு மக்கள் வாக்களித்திருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதுதான்.
அச்சமாக உள்ளது
தவறான மனிதர்கள் வெற்றி பெறலாம். ஆனால் தவறான கொள்கை வெற்றிபெற கூடாது. இந்த கொள்கைதான் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போகிறது. இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பணநாயகம்
எங்களின் உண்மையான வெற்றி தேனியில்தான் உள்ளது. தேனியில் பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி. தமிழகத்தின் வெற்றி மகத்தானது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.
தண்டனை
அதிமுக தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவுடன் சென்றது, பாமகவும் பாஜகவுடன் சென்றது அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
காங்கிரஸ் பாடுபடும்
தமிழக மக்களின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு கே எஸ் அழகிரி தெரிவித்தார்.