கொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்
சென்னை: ஆள் மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் படித்து வந்த தருமபுரி அரசு கல்லூரி மாணவர் இர்பானின் தந்தை போலி டாக்டர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தகுதி தேர்வு வந்தாலும் வந்தது, எப்படியாவது மருத்துவராகிவிட வேண்டும் என மாணவர்களின் ஆசைக்கு அவர்களது பெற்றோர்களும் தூபம் போடுகின்றனர்.
இதன் விளைவு ஆள்மாறாட்டம், போர்ஜரி செய்தாவது நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய நிலையில் அவரும் அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.

தீவிர விசாரணை
இதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரவீண், ராகுல், இர்பான் ஆகிய மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அது போல் அபிராமி என்ற மாணவியும் ஆள்மாறாட்டம் செய்ததாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சேலத்தில் சரண்
இந்த நிலையில் இர்பான் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் அவரது தந்தை முகமது சஃபியை இரு தினங்களுக்கு முன்னர் வாணியம்பாடியில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மாணவர் இர்பானும் நேற்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு சரணடைந்தார்.

கிளீனிக்
இந்த ஆள்மாறாட்டத்துக்கு முகமது சஃபி மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முகமது சஃபி, டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதும் படிப்பை நிறைவு செய்யாமல் வேலூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் கிளீனிக்குகள் வைத்ததும் தெரியவந்தது.

அச்சம்
மகன்தான் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தார் என்றால் , தந்தையோ மருத்துவப் படிப்பை முடிக்காமலேயே வைத்தியம் பார்த்துள்ளார். இதனால் இவரது கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications