'தேர்தல்' பொங்கல்: ஜன.13, 14-ல் ஆர்எஸ்எஸ் மோகன் பகவத், ஜேபி நட்டா, ராகுல் காந்தி தமிழகத்தில் முகாம்
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளையும் நாளை மறுநாளும் (ஜன.13, 14) தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இருந்தபோதும் இப்போதே தேர்தல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது. கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.
கூட்டணிகள், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெல்லி தலைவர்கள் இம்முறை தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் தங்குகிறார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஜனவரி 14-ல் சென்னையில் நடைபெறும் துக்ளக் பத்திரிகை விழாவில் பங்கேற்கிறார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வருகை தருகிறார். ஜனவரி 14-ந் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்ற கையோடு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
களைகட்டுது களம்!