கோடநாட்டில் "திடுக்கிடும்" சம்பவங்கள் நடந்துள்ளன.. விரைவில் உண்மை வரப்போகிறது- ஆர்.எஸ்.பாரதி அதிரடி
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வயிற்றெச்சிலை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றி உள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மு.க.ஸ்டாலின் பேசியதை அப்படியே எடப்பாடி பழனிசாமி வாசித்துள்ளார்.
4 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும். சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம் என்பதை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சொத்து வரி உயர்த்தப்படாவிட்டால், மத்திய அரசின் மானியங்கள் நிறுத்தப்படும் என்பதை தெளிவாக விளக்கமளித்தார் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் எப்படியெல்லாம் உயர்த்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதிமுக ஆர்ப்பாட்டம் ஏன்?
மின்சார வாரியத்தால் நடைபெற்ற ஊழலால், தங்கமணி போன்றோர் அடித்த கொள்ளையால் கடன் தொகை ரூ.1.75 லட்சத்திற்கும் மேல் சென்றுவிட்டது. இதனால் தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு சென்றுள்ளது. இதனை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. மத்திய அரசு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மானியத்தை நிறுத்திவிடும் என்பதாலேயே உயர்த்தியுள்ளோம். இவையெல்லாம் கூறிய பின்னரும், சொந்த கட்சியில் உள்ள பிரச்சினையை திசை திருப்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட நாடு வழக்கு
அதுமட்டுமல்லாமல், கோடநாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கோடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் - ஒழுங்கை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. கோடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும்.

விரைவில் சிறை செல்வார்
கோடநாடு வீடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு. அங்கு வெறும் கொள்ளை நடைபெற்றிருந்தால் கூட சாதாரண வழக்காக பார்க்கலாம். ஆனால் பல்வேறு கொலைகள் நடைபெற்றுள்ளது. அதனால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயம் தவறு செய்தவர்கள், சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஒவ்வொரு ரெய்டு நடக்கும் போது ஒவ்வொரு அமைச்சரின் வீடுகளும் பிரமிக்க வைக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, பக்கிங்ஹாம் அரண்மனையை போல் உள்ளது. எஸ்பி வேலுமணியின் வீடு ஒரு ஊர் போல் உள்ளது என்று கூறினார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி தொடர்பாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. மீண்டும் அதுபோல் நடக்காமல் இருப்பதற்காக தான் குழு அமைத்து, கருத்து கேட்கப்பட்டு விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது. இவ்வளவு பேசும் எடப்பாடி பழனிசாமி, ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும் மோடி அவர்களே என்று தீர்மானம் நிறைவேற்றுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

4 தலைவர்கள் இவர்கள் தான்
15 மாத திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். இன்று அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்கள் பலரும், திமுக அரசு அறிவித்த இலவச பேருந்தில் தான் வந்திருப்பார்கள். திமுகவில் 4 முதலமைச்சர்கள் என்று கூறுகிறார். ஆனால் அதிமுகவில் தான் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா மற்றும் இபிஎஸ் என்று 4 தலைவர்கள் இருக்கிறார்கள். அதனை மனதில் வைத்து திமுகவை விமர்சிக்கிறார்.












Click it and Unblock the Notifications